05/01/2012 - 06/01/2012

Friday 18 May 2012

சனி கிரக பரிகாரம்



சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை  ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.
அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். 

ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம். 

* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
* கோமாதா பூஜை செய்யலாம்.
* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை  கொடுத்து வணங்க வேண்டும்.
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 

லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு
* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.
* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.
* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள  இடைகாலத்தில்  வீடுகட்டுதல் கூடாது.
* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.
* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு  ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.
சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார். 

ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.
குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.
அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.
உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். ச
னி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
வாதம் நீக்குபவர்........
இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது....
இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.
குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி,  முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்
Quality advertising. Big traffic. Increase sales. Promote your website. Advertise your product to shoppers.

Friday 11 May 2012

பிள்ளையார்பட்டி பிள்ளையார்



தல வரலாறு



குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில்.



பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. கோயிலையும் சுற்றியுள்ள வயல்வெளிகளையும் நகரத்தார்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.
இத் தலம் காரைக்குடியிலிருந்து 12 வது கிலோமீட்டர் தொலைவில் திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடியை அடுத்து அமைந்திருக்கிறது. திருப்பத்தூரிலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது. கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக இத் தலத்தில் அமர்ந்திருப்பவர் கற்பக விநாயகர். இத்தலத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை மக்கள் கற்பக விநாயகர் என்றே அழைக்கின்றனர். ஆனால், அவருக்கு தேசி விநாயகர் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க விநாயகர், அழகுள்ள விநாயகர் என்று பொருள். தேசிகன் என்ற சொல் வணிகர்களைக் குறிப்பிடும் சொல். வணிகர் குலம் தழைக்க அருள் புரியும் விநாயகர், கற்பக விநாயகர்.

"கற்பக விநாயகர்" திரு உருவம் காலத்தால் பழைமை வாய்ந்த வடிவமாகும். வலது கையில் ஒரு சின்ன லிங்கமும் இடது கரத்தைத் தனது தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சையின் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். தும்பிக்கை வலமாக சுழித்துக் கொண்டிருக்கும். வலம்புரியாக வளைந்த தும்பிக்கையும் தந்தங்களின் அமைப்பும் அழகாக அமைந்திருக்கிறது. மார்பில் முப்புரி நூல் இல்லாமல், வயிற்றை முப்பட்டையாலான உதரபந்தம் அலங்கரிக்க தலையில் மகுடம் சூடி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் இடமே பிள்ளையார்பட்டி. விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார். இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. கற்றளியை அமைத்த பெருமை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பெரும்பணி. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில். அமைப்பிலும் அழகிலும் தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. மற்ற குடைவரைக் கோயில்களிலிருந்து மாறுபட்ட வடிவமுடையது. பெரும்பாலும் முகப்புத் தூண்களும் அரைத் தூண்களும் இல்லாத குடைவரைக் கோயில்கள் அமைந்ததில்லை, இது ஒன்றைத் தவிர.

விநாயகர் சந்நிதிக்கு எதிர்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாகச் சென்று வழிபாடு முடித்து கிழக்கு ராஜ கோபுர வாயில் வழியாக வெளியே வரவேண்டும். இதுவே மரபாகக் கொண்டுள்ளனர். வடக்கு கோபுர வாயிலின் வழியாக நுழைந்ததும் இரண்டு பக்கங்களிலும் அழகான மண்டபங்களைக் கொண்டுள்ளது. உள்ளே குடைவரைக் கோயிலைக் குடைந்து அமைக்கப்பட்ட ஆறு அடி உயர கற்பக விநாயகர் அர்த்தச் சித்திரமாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிர்புறமாக கொடிமரமும் பலி பீடமும் பெரிய மூஞ்சூறின் உருவமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.

இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. கற்றளி எனப்படும் இந்த மருதீசர் சந்நிதி நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணியால் சிறப்பிக்கப்பட்டது. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.

மருதீசர் கோயிலை வலம் வருவதற்காக எழுப்பப்பட்டுள்ள திருச்சுற்றுப் பாதை நல்ல நீள, அகலத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சுற்று மாளிகையின் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களையும், மாளிகைப்பத்தியில் இருக்கும் பரிவார தெய்வங்களையும் நேரில்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைக்கப்பட்டிருப்பதைச் சொல்வதற்குத்தான் வார்த்தைகளே இல்லை. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. நகரத்தாரின் முதல் திருப்பணியின்போது இச்சந்நிதி அமைக்கப்படு அம்மன் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.

கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. ராஜகோபுரத்தைவிட காலத்தால் பழைமை வாய்ந்தது இக்கோபுரம்.

விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப்ப்ரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும்.

பிரார்த்தனை

இத்தலத்தில் வணங்கினால் கல்வி ,கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம்,குடும்ப நலம் ,உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிய கணக்கு தொடங்கல், வியாபார விருத்தி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

நேர்த்தி கடன்

  • சதுர்த்தி விரதம் : முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) செய்து வழிபடல்.
  • கணபதி ஹோமம் :தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது மிகவும் விசேஷம்.அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்.

முக்கிய திருவிழாக்கள்

  • சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடிஏற்றம் செய்து திருநாள் தொடங்கும்.சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேசம்.மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்
  • திருக்கார்த்திகை
  • மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.
இவை தவிர தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்கள் , தீபாவளி ,பொங்கல் போன்ற விசேசநாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அதுமட்டுமில்லாமல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் கோயில் இது.

 சிறப்பு:
விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது.எனவேதான் பிள்ளையார்பட்டி கோயிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.இங்கு வேண்டிக்கொண்டால் நவகிரகங்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.




Wednesday 9 May 2012

அதிசயம்




இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!

கணவன், மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என தென் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு எளிய குடும்பம் அது. அது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து, உறவுக்காரர்களின் சூழ்ச்சி மற்றும் தவறான குடும்ப நிர்வாகம் ஆகியவற்றால், ஒரு வேளை சோற்றுக்கே கஷடப்படும் அளவிற்கு பிற்காலத்தில் வந்துவிட்டனர். வசதியே இல்லாம வாழ்ந்துடலாம். ஆனா வசதி வந்துட்டு மறுபடியும் போனா அதை தாங்கிக்க யாராலையும் முடியாது.  மூன்று வேளை சாப்பாடு என்பது அவர்கள் வீட்டில் இல்லை. இரண்டு வேளை தான். அதுவும் பெரும்பாலும் பழைய சோறு மற்றும் கூழ் தான். குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வசதியில்லை. ஆங்காங்கு கிடைத்த நகராட்சி பள்ளிகளில் தான் படிக்க வைக்க முடிந்தது.


அந்த குடும்பத்தில் இரண்டாவது வாரிசு அவன்.... கான்வென்ட்டில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தும் கார்பரேஷன் பள்ளி ஒன்றில் தான் 6 வது சேர்க்க முடிந்தது. ஆசையோடு பள்ளிக்கு கிளம்பும் மகனுக்கு சீருடை கூட வாங்கி கொடுக்க வழியில்லாது.... கணவரின் நல்ல வேட்டி ஒன்றை எடுத்து கத்திரித்து, அதில் சட்டை தைத்து தருகிறாள் மனைவி. மகனும் ஆவலோடு பள்ளிக்கு செல்கிறான். இப்படியாக வறுமையின் போராட்டங்களுக்கு நடுவே பள்ளி படிப்பு ஒரு வழியாக முடிகிறது.


கல்வி மீதிருந்த ஆர்வத்தால் அதற்கு பிறகு ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டபடிப்பு சேர்கிறான். படிக்கும் காலத்தில் தங்களது உறவினர் வைத்திருந்த ஹோட்டல் ஒன்றில் மாலை வேளைகளில் பில்போடும் வேலை கிடைத்தது. காலை கல்லூரி. மாலை ஓட்டல் வேலை என்று நகர்ந்தது வாழ்க்கை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு... ஏக்கம்... ! ஆசைக்கு என்று இல்லாமல் தேவைக்கு மட்டுமே வாழ்க்கை வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம்.

கல்லூரி படித்து முடித்த பின்பு, லெதர் கம்பெனி ஒன்றில் மாதம் ரூ.850/- சம்பளத்தில் சூப்பர்வைசராக வேலை கிடைத்தது. அதுவும் சில ஆயிரங்கள் செலவழித்த பின்னர் தான்.


"ஏதாவது நிச்சயம் சாதிக்க வேண்டும்" என்ற லட்சியத்துக்கிடையே பலப் பல வண்ணக் கனவுகளுடன், வாழ்க்கை துவங்குகிறது அந்த இளைஞனுக்கு. அதற்கு பிறகு திருமணம். ஒரு சிறிய அறையில் ஒண்டுகுடித்தனத்தில் தான் இல்லறம் நடக்கிறது. வறுமையில் இருந்தாலும் அவன் மகிழ்ச்சியோடு இருந்த நாட்கள் இவை தான். கணவன் மனைவி அன்பின் விளைவாக குழந்தை ஒன்று பிறக்கிறது. ஆண்டுகள் சில உருண்டோடுகின்றது. மனைவி அடுத்த குழந்தைக்கான கருவை வயிற்றி சுமந்து வருகிறாள்.

இந்நிலையில் ஒரு நாள், காலையில் கண் விழித்தபோது வலது புறக் கண்ணில் பார்வை மிக மிக மங்கலாக தெரிகிறது. எதிரே இருப்பது எதுவும் சரியாக தெரியவில்லை. (ஏற்கனவே இவருக்கு MYOPIA - கிட்டப் பார்வை உண்டு. அதற்காக கண்ணாடி அணிந்திருந்தார்). கண்ணுக்குள் ஏதோ ஒரு வித வலி. அருகே உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு ஓடுகிறார். "பயப்படாதீங்க.... ஒன்னும் இல்லே. ட்ராப்ஸ் எழுதித் தர்ரேன். அதை போட்டுட்டு வாங்க... சரியாகிவிடும்." என்று கூறுகிறார். ஆனால், ஒரு சில நாட்கள் அதை போட்டும் எந்தப் பயனும் இல்லை. நாளாக நாளாக பார்வை போய்கொண்டே இருக்கிறது. இவரது தந்தைக்கு, மறைந்த பேச்சாளர் வலம்புரி ஜானை நன்கு தெரியும். அவரது பரிந்துரையின் பேரில், நகரிலேயே பெரிய கண் மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்து செல்கிறார். அங்கு தலைமை மருத்துவர் கண்களை பரிசோதிக்கிறார். "உங்களுக்கு கண்களில் வந்திருப்பது RETINAL HAEMORRHAGE என்னும் ஒரு வித நோய். அதாவது உங்கள் கண்ணுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை நிறுத்த முடியாது. தானாக நின்றால் தான் உண்டு. இது ஏன் வருகிறது எப்படி வருகிறது இதெல்லாம் தெரியாது." என்கிறார். (1989 இல் நடக்கும் விஷயம் இது. இப்போதுள்ளது போல அப்போது கண் மருத்துவத்தில் நவீன வசதிகள் எல்லாம் கிடையாது.).


இவர் கண்கள் கலங்க...."இதுக்கு என்ன தான் வழி சார்?" என்று கேட்க, அதற்க்கு மருத்துவர் "இப்போவே ஒரு ப்ளைண்ட் ஸ்கூலில் நீங்க சேருவது தான் நல்லது. ஏன்னா... இந்த பிரச்னை உங்களோட இடது கண்ல கூட ஸ்டார்ட் ஆயிடுச்சு. சீக்கிரம் உங்களோட இடது கண் பார்வையும் போய்விடும். இதுக்கு ஒரே வழி... பார்வை இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்ள பழகிக்கொள்வது தான். Rest is with God" என்று கூறுகிறார்.


இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. வாழ்க்கையே ஒரு கணம் இருண்டுவிட்டது போல உணர்கிறார். வீட்டிற்கு வருகிறார். அக்கறையுடனும் கவலையுடனும் விசாரிக்கும் மனைவியிடம் கூட இவருக்கு உண்மையை சொல்ல தைரியம் இல்லை. என்ன சொல்வது? எதை சொல்வது? "கொஞ்ச நாள் மருந்து போட்டுட்டு வந்தா குணமாயிடும்னு சொல்லியிருக்கிறார்" என்று  சும்மா ஒப்புக்கு சொல்லிவைத்துவிட்டு படுக்கையில் சாய்கிறார். தூக்கம் வரவில்லை. எப்படி வரும்? இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு கண்லயும் பார்வை போய்விடும்னா எப்படி தூக்கம் வரும்? எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு ஒரு 70 வயதுக்கு மேல் இப்படி ஒரு பிரச்னை வந்தாக் கூட பரவாயில்லே. தாங்கிக்கலாம். ஆனா, வாழ்க்கையே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு. இந்த சூழ்நிலைல இப்படி ஒரு பிரச்னை வந்தா யாரால தாங்கிக்க முடியும்?


இரவு முழுதும் யோசிக்கிறார். "நமக்கு மட்டும் ஏன் இப்படி? அப்படி என்ன பாவம் செஞ்சோம்?" எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது.


திக்கற்றோருக்கு அந்த தெய்வம் தானே துணை? கடைசியில், இறைவனின் கால்களைப் பற்றுவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வருகிறார். இவருக்கு சுவாமி ஐயப்பன் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இவரது இஷ்ட தெய்வம் என்றால் அது ஐயப்பன் தான். மனம்விட்டு அடிக்கடி ஐயப்பனிடம் பேசுவது இவரது வழக்கம். 


எனவே, தன் வீட்டில் உள்ள ஐயப்பன் படத்தின் முன்பு நின்று ஐயப்பனிடம் மனமுருகி பேசுகிறார். "நான் என்ன பாவம் செய்தேன் ஐயப்பா? எனக்கு ஏன் இப்படி ஒரு பெரிய தண்டனை? வாழ்க்கையே இனிமே தான் ஆரம்பிக்கப்போகிற ஒரு சூழ்நிலைல இப்படி ஒரு தண்டனை எனக்கு ஏன்? உன்னைத் தவிர எனக்கு வேறு யாரு இருக்கா? நீ தான் என்னை காப்பத்தனும்..." இப்படி பலவாறாக புலம்புகிறார்.


கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறார். அப்போதெல்லாம் 'டிக் 20' என்ற ஒரு வகை பூச்சி மருந்து ரொம்ப பேமஸ். அதை வாங்கி வைத்துக்கொள்கிறார்.


நேரே ஐயப்பன் முன்பு போய், "பார்வையில்லாமல் இந்த உலகத்தில் வாழ்வதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உனக்கு ஒரு வாரம் டயம் தருகிறேன். அதற்குள் என்னுடைய இந்த பிரச்னை முடிவுக்கு வரவேண்டும். இல்லையெனில் இந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிர் துறப்பேன். நிச்சயமாக" என்று அந்த இறைவனுக்கு கெடு வைக்கிறார்.


சரி... பூச்சி மருந்தை சாப்பிட்டும் சாகலேன்னா என்ன செய்றது? (சில பேர் அந்த பூச்சி மருந்தை குடித்தும் பிழைத்திருக்கிறார்களாம்.) எனவே முன்னெச்சரிக்கையாக அரை பாட்டில் தூக்க மாத்திரைகளையும் வாங்கி வைத்துக்கொள்கிறார். தூக்க மாத்திரைகளை முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் பூச்சி மருந்தை குடிக்கலாம் என்று பிளான்.


ஐயப்பனுக்கு ஒரு வாரம் கெடு வைத்தாயிற்று. இவர் கெடு விதித்த நாட்கள் துவங்குகிறது. அதாவது கவுண்டிங் வித் டெத் ஸ்டார்ட்ஸ். மருத்துவத்துக்கும் இறைவனுக்கும் இவர் வைத்துள்ள போட்டிக்கான விடை தெரிய இன்னும் ஒரு வாரமே உள்ளது.


இவரை பொறுத்தவரை எப்படியும் ஒரு வாரம் கழித்து சாகப் போகிறோம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார். ஏனெனில், நகரிலேயே தலை சிறந்த கண் மருத்துவர் கூறிய வார்த்தைகளையும் மீறி தனக்கு பார்வை வரும் என்கிற நம்பிக்கை இவருக்கு இல்லை. இருப்பினும். பாறையில் துளிர்விடும் வேரைப் போல ஒரு ஓரத்தில் சின்ன நம்பிக்கை இருக்கிறது. "அந்த ஹரிஹரசுதன் நம்மை கைவிட மாட்டான்" என்று.


இந்த இடைப்பட்ட ஒரு வாரம், இவர் மிகவும் விரும்பிய ஆடைகளை வாங்கி அணிந்துகொள்கிறார். ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கி சாப்பிடுகிறார். குழந்தையை கொஞ்சுகிறார். மரணத்தை அடுத்த வாரம் சந்திக்கப்போகும் ஒருவனுடைய மனநிலையில் இருந்துகொண்டு அனைத்தையும் செய்கிறார். இவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது மனைவிக்கோ அல்லது வேறு எவருக்குமே தெரியாது. இந்த ஒரு வாரமும் ஒவ்வொரு நாளும் தூங்கி விழித்த பின்பு, ஐயப்பன் படத்தை ஒரு சில வினாடிகள் பார்த்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பதை வழக்கமாக வெச்சிக்கிறார்.


7 வது நாள் -  ஞாயிற்றுக் கிழமை படுக்கச்செல்லும் முன் நினைத்துக்கொள்கிறார். "இது தான் நமது கடைசி தூக்கமோ... ஒருவேளை...ஹூம்... !" என்று.

மறுநாள் திங்கட்கிழமை காலை எழுந்திருக்கிறார். வழக்கம்போல ஐயப்பன் படத்தை பார்க்கிறார். ஆனால் இம்முறை பார்வையில் ஏதோ வித்தியாசம். வித்தியாசம் அல்ல. மிகப் பெரிய முன்னேற்றம். எந்த கண்ணில் பிரச்னை என்று தற்கொலை முடிவிற்கு போனாரோ அந்தக் கண்ணில் பார்வை முன்னை விட பிரகாசமாக தெரிகிறது. ஒரு கணம் இது கனவா நிஜமா? தன்னை கிள்ளி பார்த்துக்குறார். நிஜம் தான். "ஐயப்பாஆஆஆஆஆஆஆ............." கதறுகிறார் ஐயப்பன் முன்பு. வேறு வார்த்தைகள் வரவில்லை.


உடனே தான் மருத்துவமனைக்கு ஓடுகிறார். அதே மருத்துவர் இவரது கண்களை பரிசோதித்து ஒரு கணம் ஷாக் ஆயிடுறார். "இந்த கண்ணையா நான் இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணினேன்? எல்லாம் ரொம்ப கரெக்டா இருக்கே இப்போ. ஒன்னுமே புரியலியே எனக்கு?" என்று தனது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். இடது கண்ணை டெஸ்ட் செய்கிறார். அங்கு கூட அந்த ரத்தக் கசிவு இருந்ததற்கான சுவடே தெரியவில்லை.


"தம்பி உன் ரெண்டு கண்ணும் நல்லா பர்ஃபெக்டா  இருக்கு. இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணப்போ எங்கே தப்பு நடந்துச்சுன்னு தெரியலே..." மருத்துவர் நடந்தது என்னவென்று புரியாமல் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் கூறுகிறார்.


ஆனால் நடந்தது என்னவென்று அந்த ஐயப்பனுக்கு தானே தெரியும்!!!!!!!!!!!!!!!!!!!!!


இவரோட வாழ்க்கையில் எப்படி இந்த அதிசயம் சாத்தியமாச்சு? ஒரு பட விழாவுல சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.... "நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும்... அந்த தெய்வத்தின் மீது நாம் எந்தளவு நம்பிக்கை வைக்கிறோமோ அந்தளவு அந்த தெய்வத்துக்கு சக்தி இருக்கும்! So, கடவுள் மேல் நீங்கள் வைக்கும் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கவேண்டும்!" என்று.


(மேற்படி நண்பருக்கு அந்த சூழ்நிலையிலும் ஐயப்பன் மேல இருந்த அந்த பக்தி - அந்த சின்ன நம்பிக்கை - மிகப் பெரிய விஷயமுங்க. அதை நினைவுல வெச்சிகோங்க!)


என்ன நம்புறதுக்கு கஷ்டமா இருக்கா? அட... நம் கண் முன்னே வாழ்ந்துவரும் நேரடி சாட்சிங்க இவர். நம்பலேன்னா எப்படி?


அன்றைக்கு ஐயப்பனால் காப்பற்றப்பட்ட இவர் அதற்கு பிறகு வாழ்க்கையில் சோதனைகளை, அவமானங்களை சந்திக்காமல் இல்லை. ஆனால், கடவுள் நம்முடன் இருக்கிறார். அவரது பரிபூரண கருணை நமக்கு என்றும் இருக்கிறது என்ற நம்பிக்கையில், சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, அவமானங்களை எல்லாம் அவன் இட்ட உரங்களாக கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்து, இன்று மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்.


MADURAI APPU GROUP OF RESTAURANTS, R C GOLDEN GRANITES, SHRI SABARI BHAVAN, BLITZ BAKERY & CONFECTIONARY, BARBEQUE BISTRO என்று சுமார் அரை டஜனுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் ஆர்.சந்திரசேகர்.


ரூ.850/- மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கிய இவர் இன்று பல கோடிகளை ஒவ்வொரு மாதமும் அனாயசமாக TURN-OVER செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.


விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், அயராத உழைப்பும் கூடவே கொஞ்சம் தெய்வ நம்பிக்கையும் இருந்தால் எப்பேற்ப்பட்ட சாதனையும் சாத்தியமே என்று கூறும் இவரது வரலாறு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.


எப்படி இவற்றை இவர் சாதித்தார்? அதற்கு இவர் கண்ட வழிமுறைகள் என்ன? உழைத்த விதம் என்ன? பட்ட அவமானங்கள் என்ன? சந்தித்த துரோகங்கள் என்ன? அனைத்தையும் விரிவாக உங்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.

விரைவில் தனிபதிவாக... ONLYSUPERSTAR.COM தளத்தில்... 







நன்றி :

Monday 7 May 2012

தென்குடித்திட்டை



தென்குடித்திட்டை (திட்டை)

இறைவர் திருப்பெயர்  : வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், 
      தேரூர்நாதர், தேனுபுரீஸ்வரர், ஸ்வயம்பூதேஸ்வரர், 
      அனந்தேஸ்வரர், நாகேஸ்வரர், ரதபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்  : உலகநாயகி, மங்களாம்பிகை, மங்களேஸ்வரி, 
      சுகந்தகுந்தளாம்பிகை.

தல மரம்   : சண்பகம். (தற்போதில்லை.)

தீர்த்தம்    : சூல தீர்த்தம்.  (இதற்கு சக்கர தீர்த்தம் என்றும் பெயர்)

வழிபட்டோர்   : வசிட்டர், தேவர், பைரவர், முருகன், பிரமன், திருமால், 
      காமதேனு, ஆதிசேஷன் ஆகியோர்.

தேவாரப் பாடல்கள்  : சம்பந்தர் - முன்னைநான் மறையவை.

தல வரலாறு

  • காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் - திட்டில் - அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது.
  • உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் 'குடித்திட்டை' எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர்.
  • சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி - தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

சிறப்புக்கள்

  • இக்கோயில் நல்ல கட்டமைந்த கற்கோயில்; எல்லாச் சந்நிதிகளும் மழமழப்பாக்கப்பட்ட கருங்கற்களால் ஆனவை.
  • மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922-ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
  • இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தக்ஷ¤ண குடித்வீப மஹாத்மியம்" என்ற பெயரில் உள்ளது. திரு. வி. பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள "சுயம்பூதேஸ்வரர் புராணத்தை" - இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
  • (இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம் ரா. கு. ராம, இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கைகுவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்ட்டுள்து.)

Saturday 5 May 2012

அறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை




அறப்பளீஸ்வரர் கோவில்கொல்லிமலை


தல வரலாறு

  • இன்று மக்கள் வழக்கில் "கொல்லிமலை" என்று வழங்குகிறது. இயற்கை வளம் மிக்க மலை.
  • 'வல்வில்ஓரி' என்னும் மன்னன் ஆண்ட பகுதி.
  • காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.
  • அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று.
  • இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.
  • இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.
  • இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி வருமாறு ;- இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.
  • இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.
  • கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • பலா, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, எழுமிச்சை மரங்கள் அடர்ந்து, பசுமையாகக் காட்சியளிக்கும் இம்மலைமீது 'அறப்பளீசுவரர்' ஆலயம் உள்ளது.
  • இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன; இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
  • நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயருமுண்டு.
  • ஊர் - பெரிய கோயிலூர் என்றும்; கோயிற் பகுதி - அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது.
  • அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலே பார்த்துத் தரிசிக்க வேண்டும்.
  • கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக - 760 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 600 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.
  • செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது.
  • தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன.
  • மலை வாழ் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
  • உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.
  • கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.
  • இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
நாமக்கல்லிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்குத்தான மலைப்பாதை - 72 கொண்டை ஊசி வளைவுகளைக் (hair pin bend) கொண்டது. நாமக்கல்லிலிருந்து கொல்லி மலைக்கு 43 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்து (MINI-BUS) செல்கிறது. அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் உள. இம்மலைப் பாதை, மழைக்காலத்திற்கு ஏற்றதன்று.

Friday 4 May 2012

2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்?



2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்?
நமது பூமியை சந்திரன் ஒரு சுற்று சுற்றிவர 28 1 / 4 நாட்கள் ஆகின்றன.நமது சூரியனை நாம் வாழும் பூமி சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகின்றன.நமது சூரியன் ஒரு மையத்தை சுற்றிவருகிறது.அந்த மையத்தின் பெயர் அல்சியோன் ஆகும்.இந்த அல்சியோனை நமது சூரியன் சுற்றி வர 26,000 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த அல்சியோன் பிரபஞ்ச மையத்திலிருந்து வெளிவரும் போட்டான் பேண்டில் பொருந்தியுள்ளது.இந்த போட்டான் பேண்டின் அகலத்தைக் கடக்க நமது பூமிக்கு 2000 ஆண்டுகள் ஆகும்.
கி.பி.1987 ஆம் ஆண்டில் இந்த போட்டான் பேண்டிற்குள் பிரவேசித்துள்ளது.நமது பூமி இந்த போட்டான் பேண்டிற்குள் கி.பி.1998 ஆம் ஆண்டில் பிரவேசித்துள்ளது.இந்த சக்தி மெல்ல மெல்ல வலுவடைந்து,14 ஆவது ஆண்டு,கி.பி.2012 இல் அதி உச்சமடையப்போகிறது.இந்த சமயத்தைப்பயன்படுத்தி,நாம் தியானம் செய்தால்,பிரபஞ்ச சக்தி எனப்படும் காஸ்மிக் சக்தி நமக்குப் பெருமளவில் கிடைக்கும்.இதனால்,நாம் ஏராளமான நன்மைகளையும்,முக்தி எனப்படும் மறுபிறப்பற்ற நிலையையும் அடையமுடியும்.
இப்படிப்பட்ட ஒரு காலகட்டம் 11,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்படும்.
அதேசமயம்,இந்த அபார சக்தியால் பூமியின் அச்சாணி சற்றேவிலகுவதற்கு வாய்ப்புக்கள்உண்டு.இதனால்,இயற்கைசீற்றங்கள்,ஆழிப்பேரலை,ஓயாத மழை உண்டாக வாய்ப்புக்கள் அதிகம்.பூமியில் பல தீயசக்திகள் வலுப்பெற்று,பூமியில் கஷ்டநஷ்டங்கள் ஏற்படலாம்.
ஆனால்,கி.பி.2012 க்குள் இந்த நிலைமாறி உலகெங்கும் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால்,தீயசக்திகள் அழிந்து உலகமேஒரு அமைதி நிலைக்கு வந்துவிடும்.
அல்சியோன் என்ற பிரம்மாண்ட நட்சத்திரம்,பிரபஞ்சமையத்தைச் சுற்றி வர 2,25,000 ஆண்டுகள் ஆகின்றன.வரும் 21.12.2012 அன்று அல்சியோன் தனது முதல் சுற்றை முழுமையாக்குகின்றது.அதாவது பிரபஞ்சமையத்தை ஒரு முறை வலம் வந்திருக்கும்.
அதேபோல்,நமது சூரியனும் தனது 8 வது சுற்றை முடித்துக்கொள்ளும் நாள் அதுதான்.பிரபஞ்சத்துக்கே இந்த நாள் மிக முக்கியமான நாள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புத்தர்,விவேகானந்தர்,ஈசா எனப்படும் ஏசு,முகமது நபி முதலான தெய்வீக சக்திகள் நமது பூமிக்கு வருகைதருவார்கள் என்பது நம்பிக்கை.அதற்குள் நாம் தினமும் தியானம் செய்து நமது மூன்றாவது கண்ணைத்திறந்துவிட்டால், இந்த மகான்கள் அனைவரையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம்நமக்குக் கிடைக்கும்.ஆதாரம்:BRINGERS OF THE DAWN BY BARBARA MARCINIAK

நன்றி : ஆன்மீககடல்.காம் 

Thursday 3 May 2012

குரு:வழிபாடு,பரிகாரம்



                    குணமிகு வியாழ குரு பகவானே
                    மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
                    பிரகஸ்பதி வியாழ குருபர நேசா
                    கிரகதோஷமின்றி கடாட்சித் தருள்வாய்!







குருவின் பிற பெயர்கள்::
 
குரு பகவானுக்கு அமைச்சன், ஆசான், பொன்னன், தேவ குரு, ஸுராச்சாரியார், வாகீசர், பீதாம்பரர், யுவர், திரிலோகேசர், பூஜ்யர், கிரகாதீசர், தியாகரர், நீதிஞ்ஞர், நீதிகாரகர், தாராபதி, கிரகபீடாஹரர், ஸெளமிய மூர்த்தி என பல்வேறு பெயர்களை பெற்றுத் திகழ்கிறார்.
 
குருபலம்:::
 
ஒருவர் ஜாதகதக்தில் குரு பலம் பெற்றிருப்பது முக்கித்துவம் வாய்ந்தது. குரு பலமே நாம் எடுத்த காரியத்தில் வெற்றி தரும். குரு பலம் இருந்தால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், திருமணத்தடை போன்றவை நீங்கும்.
 
ஒருவருக்கு திருமண பாக்கியம் கிடைக்க குரு பலம் அவசியம். குரு பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும்  அந்த இடத்திலிருந்து 5,7,9இடத்து பார்வை பெற்ற ஸ்தானங்கள் குரு பலம் அடைகின்றன.  
 
 
குரு பகவானுக்குரிய பொதுவான பரிகாரங்கள் மற்றும் அவர் அருளை அள்ளித்தரும்  வழிபாடுகள் வருமாறு:  
 
நவக்கிரக பீடத்தில் உள்ள குருவை முல்லை மலரால் அர்ச்சனை செய்யலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம்.   வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.
 
அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை வணங்கி ஆசிபெறலாம். குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம். விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம். அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 முறை சுற்றி வலம் வரலாம்.
 
இந்திரனுக்கு குரு தந்த சாபம்::
 
மீன்களும், தவளைபோன்ற உயிரினங்களும் நீரில் வசிப்பதற்கு புராணத்தில் கூறப்படும் காரணம் வருமாறு:  ஒரு முறை  இந்திரலோகத்தில் உள்ள தடாகத்திற்கு குரு பகவான் நீராடச்சென்றார்.
 
அப்போது அந்த குளத்தில் இருந்த நீர்கலங்கி அழுக்கடைந்திருந்தது. இதனால் ஆத்திரமடைந்த குரு பகவான் இந்திரனிடம் சென்று "உன் அழுக்குத் தண்ணீரில் இனி மீன்களும், தவளைகளும் வசிக்கும்.'' என்று சபித்தார். அந்த சாபத்தின் விளைவாகவே நீர்நிலைகளில் மீன்களும் தவளைகளும் வசிப்பதாக ஐதீகம்.
 
குரு பகவானுக்கு மகன் செய்த உதவி:::
 
தேவர்களின் குருவாக  பிரஹஸ்பதியாகிய குருபகவான் திகழ்ந்துபோல அசுரர்களுக்கு சுக்கரன் குருவாக திகழ்நதார். இறந்தவர்களை உயிர்த்தெழ வைக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை சுக்கிரன் அறிந்து இருந்ததால் தேவாசுரப்போரில் மாண்ட அசுரர்களை அந்த மந்திரத்தை பயன்படுத்தி சுக்கிரன் உயிர்த்தெழச் செய்தார்.
 
இதனால் அசுர பலம் கூடிக்கொண்டே போனது. இதனால் திகைத்துபோன பிரஹஸ்பதி அந்த மந்திரத்தை சுக்கிரனமிடமிருந்து கற்றுவருவதற்காக  தன் மகன் கசனை  அனுப்பி வைத்தார். கசன் தான் குரு பகவானின் மகன் என்று சிறிதும் காட்டி கொள்ளாமல் சுக்கிரன் ஆசிரமத்தில் இருந்து வந்தான்.
 
எனினும் சீடர்களில் கசனை அடையாளம் கண்டு அவனை கொன்றனர். எனினும் சுக்கிரன் கசனை  தன்மந்திரத்தை பயன்படுத்தி காப்பாற்றினார். இவ்வாறு காப்பாற்றவே மூன்றாவது முறை கசனின் பிணத்தை எரித்து அந்த சாம்பலை பானத்தில் கலந்து சுக்கிராச்சாரியாருக்கு கொடுத்துவிட்டனர்.
 
அவரும் அதை மறந்து குடித்துவிட்டார். சுக்கிரன் மகள் தேவயானி கசனை காதலித்து வந்தாள். எனவே கசனை காணாமல் தவித்த அவள் தன் தந்தையிடம் முறையிட்டாள். கசனை வழக்கம் போல தன் சீடர்கள் கொன்றிருப்பார்கள் என்று நினைத்த சுக்கிராச்சாரியார் அவனை உயிர்பெற வைப்பதற்காக மிருத சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தார்.
 
அவரது வயிற்றுக்குள் இருந்த கசன் உயிர்பெற்றான். கசனை வெளியே கொண்டு வரவேண்டுமானால் சுக்கிரன் மாள வேண்டியிருக்கும் எனவே அந்த மந்திரத்தை கசனிடம் உபதேசித்தார். கசன் சுக்கிரனின் வயிற்றைப் பிளந்தகொண்டு வெளியே வந்தார்.
 
கீழே இறந்து கிடந்த சுக்கிரனைப் மிருத சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி உயிர்த்தெழச் செய்தான். பிறகு தன் தந்தையிடம் சென்று மிருத சஞ்சீவினி மந்திரத்தை கூறினான்.
 
சிவனும் தட்சிணாமூர்த்தியும்::
 
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார். சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.
 
பார்வதி தேவி இமவான் மகளாக பிறந்து வளர்ந்த நேரத்தில் பிரம்மதேவருடைய மகன்களான  சனகன், சனந்தன், சனாதனன்,  சனத் குமுரன் ஆகிய நான்கு ரிஷகள் சிவபெருமானிடம் வந்து ஒரு கோரிக்கையை வைத்தனர்.. "வேதங்கள் , ஆகமங்களின் உட்பொருளை உபதேசிக்க வேண்டினர்.
 
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு வேதங்களை உபதேசிப்பதற்காக சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
 
குரு வழிபாடு தரும் பலன்கள்::
 
குரு வழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும், அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும் சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும். மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும், மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால் நீங்கும் என்பது ஐதீகம்.
 
திருமணத்தடையை நீக்குவதில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே திருமணம் தடைபட்டு வருபவர்கள் குருவை அவசியம் வணங்குவது நல்லது. புத்திர பாக்கியம் தருவதிலும் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே  குழந்தை பாக்கியம் தடைபட்டு வரும் தம்பதிகள் குரு பகவானை  வழிபட்டு வருவது நல்லது.

நன்றி : மாலைமலர்