குரு:வழிபாடு,பரிகாரம்

Thursday 3 May 2012

குரு:வழிபாடு,பரிகாரம்



                    குணமிகு வியாழ குரு பகவானே
                    மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
                    பிரகஸ்பதி வியாழ குருபர நேசா
                    கிரகதோஷமின்றி கடாட்சித் தருள்வாய்!







குருவின் பிற பெயர்கள்::
 
குரு பகவானுக்கு அமைச்சன், ஆசான், பொன்னன், தேவ குரு, ஸுராச்சாரியார், வாகீசர், பீதாம்பரர், யுவர், திரிலோகேசர், பூஜ்யர், கிரகாதீசர், தியாகரர், நீதிஞ்ஞர், நீதிகாரகர், தாராபதி, கிரகபீடாஹரர், ஸெளமிய மூர்த்தி என பல்வேறு பெயர்களை பெற்றுத் திகழ்கிறார்.
 
குருபலம்:::
 
ஒருவர் ஜாதகதக்தில் குரு பலம் பெற்றிருப்பது முக்கித்துவம் வாய்ந்தது. குரு பலமே நாம் எடுத்த காரியத்தில் வெற்றி தரும். குரு பலம் இருந்தால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், திருமணத்தடை போன்றவை நீங்கும்.
 
ஒருவருக்கு திருமண பாக்கியம் கிடைக்க குரு பலம் அவசியம். குரு பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும்  அந்த இடத்திலிருந்து 5,7,9இடத்து பார்வை பெற்ற ஸ்தானங்கள் குரு பலம் அடைகின்றன.  
 
 
குரு பகவானுக்குரிய பொதுவான பரிகாரங்கள் மற்றும் அவர் அருளை அள்ளித்தரும்  வழிபாடுகள் வருமாறு:  
 
நவக்கிரக பீடத்தில் உள்ள குருவை முல்லை மலரால் அர்ச்சனை செய்யலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம்.   வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.
 
அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை வணங்கி ஆசிபெறலாம். குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம். விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம். அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 முறை சுற்றி வலம் வரலாம்.
 
இந்திரனுக்கு குரு தந்த சாபம்::
 
மீன்களும், தவளைபோன்ற உயிரினங்களும் நீரில் வசிப்பதற்கு புராணத்தில் கூறப்படும் காரணம் வருமாறு:  ஒரு முறை  இந்திரலோகத்தில் உள்ள தடாகத்திற்கு குரு பகவான் நீராடச்சென்றார்.
 
அப்போது அந்த குளத்தில் இருந்த நீர்கலங்கி அழுக்கடைந்திருந்தது. இதனால் ஆத்திரமடைந்த குரு பகவான் இந்திரனிடம் சென்று "உன் அழுக்குத் தண்ணீரில் இனி மீன்களும், தவளைகளும் வசிக்கும்.'' என்று சபித்தார். அந்த சாபத்தின் விளைவாகவே நீர்நிலைகளில் மீன்களும் தவளைகளும் வசிப்பதாக ஐதீகம்.
 
குரு பகவானுக்கு மகன் செய்த உதவி:::
 
தேவர்களின் குருவாக  பிரஹஸ்பதியாகிய குருபகவான் திகழ்ந்துபோல அசுரர்களுக்கு சுக்கரன் குருவாக திகழ்நதார். இறந்தவர்களை உயிர்த்தெழ வைக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை சுக்கிரன் அறிந்து இருந்ததால் தேவாசுரப்போரில் மாண்ட அசுரர்களை அந்த மந்திரத்தை பயன்படுத்தி சுக்கிரன் உயிர்த்தெழச் செய்தார்.
 
இதனால் அசுர பலம் கூடிக்கொண்டே போனது. இதனால் திகைத்துபோன பிரஹஸ்பதி அந்த மந்திரத்தை சுக்கிரனமிடமிருந்து கற்றுவருவதற்காக  தன் மகன் கசனை  அனுப்பி வைத்தார். கசன் தான் குரு பகவானின் மகன் என்று சிறிதும் காட்டி கொள்ளாமல் சுக்கிரன் ஆசிரமத்தில் இருந்து வந்தான்.
 
எனினும் சீடர்களில் கசனை அடையாளம் கண்டு அவனை கொன்றனர். எனினும் சுக்கிரன் கசனை  தன்மந்திரத்தை பயன்படுத்தி காப்பாற்றினார். இவ்வாறு காப்பாற்றவே மூன்றாவது முறை கசனின் பிணத்தை எரித்து அந்த சாம்பலை பானத்தில் கலந்து சுக்கிராச்சாரியாருக்கு கொடுத்துவிட்டனர்.
 
அவரும் அதை மறந்து குடித்துவிட்டார். சுக்கிரன் மகள் தேவயானி கசனை காதலித்து வந்தாள். எனவே கசனை காணாமல் தவித்த அவள் தன் தந்தையிடம் முறையிட்டாள். கசனை வழக்கம் போல தன் சீடர்கள் கொன்றிருப்பார்கள் என்று நினைத்த சுக்கிராச்சாரியார் அவனை உயிர்பெற வைப்பதற்காக மிருத சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தார்.
 
அவரது வயிற்றுக்குள் இருந்த கசன் உயிர்பெற்றான். கசனை வெளியே கொண்டு வரவேண்டுமானால் சுக்கிரன் மாள வேண்டியிருக்கும் எனவே அந்த மந்திரத்தை கசனிடம் உபதேசித்தார். கசன் சுக்கிரனின் வயிற்றைப் பிளந்தகொண்டு வெளியே வந்தார்.
 
கீழே இறந்து கிடந்த சுக்கிரனைப் மிருத சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி உயிர்த்தெழச் செய்தான். பிறகு தன் தந்தையிடம் சென்று மிருத சஞ்சீவினி மந்திரத்தை கூறினான்.
 
சிவனும் தட்சிணாமூர்த்தியும்::
 
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார். சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.
 
பார்வதி தேவி இமவான் மகளாக பிறந்து வளர்ந்த நேரத்தில் பிரம்மதேவருடைய மகன்களான  சனகன், சனந்தன், சனாதனன்,  சனத் குமுரன் ஆகிய நான்கு ரிஷகள் சிவபெருமானிடம் வந்து ஒரு கோரிக்கையை வைத்தனர்.. "வேதங்கள் , ஆகமங்களின் உட்பொருளை உபதேசிக்க வேண்டினர்.
 
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு வேதங்களை உபதேசிப்பதற்காக சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
 
குரு வழிபாடு தரும் பலன்கள்::
 
குரு வழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும், அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும் சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும். மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும், மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால் நீங்கும் என்பது ஐதீகம்.
 
திருமணத்தடையை நீக்குவதில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே திருமணம் தடைபட்டு வருபவர்கள் குருவை அவசியம் வணங்குவது நல்லது. புத்திர பாக்கியம் தருவதிலும் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே  குழந்தை பாக்கியம் தடைபட்டு வரும் தம்பதிகள் குரு பகவானை  வழிபட்டு வருவது நல்லது.

நன்றி : மாலைமலர் 

0 comments :

Post a Comment